உடல்நிலையில் முன்னேற்றம் : ரிஷப் பந்த் வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் குஷி
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஊன்றுகோல் உதவி இல்லாமல் நடக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில், டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் அவரது கார் மோதி தீப்பிடித்ததால், பந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் விபத்திற்கு பிறகு ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்த ரிஷப் பந்த், தற்போது அதை தூக்கி வீசிவிட்டு தானாக நடக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் இன்னும் சில மாதங்களில் முழு உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்புவார் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.