இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 3வது ODI : படுதோல்வி அடைந்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது. முன்னதாக, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதமடித்து 119 ரன்களை சேர்த்தார். மேலும், கேப்டன் அலீசா ஹீலி 83 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்னே ராணாவுக்கு பதிலாக களமிறங்கிய மன்னத் காஷ்யப் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 30 ரன்களை வாரி வழங்கினார்.
148 ரன்களுக்கு சுருண்டது இந்தியா
கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 29 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 0-3 என தோற்று ஒயிட் வாஷ் தோல்வியைப் பெற்றுள்ளது. இதையடுத்து, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் ஜனவரி 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன.