LOADING...
2030ல் 64 அணிகள்? ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மாற்றம் செய்ய திட்டம்
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மாற்றம் செய்ய திட்டம்

2030ல் 64 அணிகள்? ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மாற்றம் செய்ய திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 13, 2026
11:58 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் விருந்தளிக்கும் வகையில், வரும் 2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் 48 அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்று வரும் 2026 உலகக்கோப்பையே வரலாற்றின் மிகப்பெரிய தொடராகக் கருதப்படும் வேளையில், அடுத்த தொடரை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த ஃபிஃபா திட்டமிட்டு வருகிறது.

புதிய யோசனை

சிறிய நாடுகளுக்கு வாய்ப்பளிக்க முன்மொழியப்பட்ட புதிய யோசனை

உருகுவே கால்பந்து சங்கத்தின் தலைவர் இக்னேசியோ அலோன்சோ முன்வைத்த இந்த 64 அணிகள் திட்டத்தை, தற்போதைய உலகக்கோப்பை முடிந்தவுடன் உரிய குழுக்கள் மூலம் விரிவாக விவாதிக்க உள்ளதாக இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார். உலகக்கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு அனைத்து நாடுகளுக்கும் இருக்க வேண்டும் என்றும், சிறிய நாடுகளுக்கு இத்தகைய பெரிய மேடைகளில் வாய்ப்பளித்தால் மட்டுமே அவை தங்களது கால்பந்து தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ள ஊக்கமாக அமையும் என்றும் அவர் பிளூவின் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

2030 உலகக்கோப்பை

வரலாற்றுச் சிறப்புமிக்க 2030 நூற்றாண்டு உலகக்கோப்பைத் தொடர்

வரும் 2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடரானது, 1930 இல் உருகுவேயில் தொடங்கப்பட்ட முதல் ஃபிஃபா உலகக்கோப்பையின் 100வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சிறப்புமிக்க தொடராக அமையவுள்ளது. இந்த வரலாற்றுத் தொடரானது உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஆறு நாடுகளில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடரின் அளவை 64 அணிகளாக விரிவுபடுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ இறுதி முடிவு உரிய விவாதங்களுக்குப் பிறகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இறுதிக்கட்டம்

இறுதி கட்டத்தை எட்டியுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பை

இதற்கிடையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணி ஸ்பெயினையும், இரண்டாவது அரையிறுதியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தையும் எதிர்கொள்ளவுள்ளன. இத்தொடரின் மகுடத்தை சூடப்போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி வரும் ஜூலை 19 அன்று நடைபெறவுள்ளது.

Advertisement