ஃபிஃபா அதிரடி: மகளிர் கால்பந்து அணிகளில் பெண் பயிற்சியாளர்கள் கட்டாயம்! புதிய விதிமுறை அமல்
செய்தி முன்னோட்டம்
பெண் கால்பந்து வீரர்கள் மைதானத்தில் சாதித்து வரும் அளவிற்கு, பயிற்சியாளர் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் இல்லை என்பதை உணர்ந்த ஃபிஃபா, கடந்த மார்ச் 19 அன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இதன்படி, ஃபிஃபா நடத்தும் அனைத்து மகளிர் கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்கும் அணிகளில் குறைந்தது ஒரு பெண் தலைமைப் பயிற்சியாளர் அல்லது உதவிப் பயிற்சியாளர் இடம்பெறுவது இனி கட்டாயமாகும். கூடுதல் விவரங்கள் இங்கே:-
முக்கிய அம்சங்கள்
புதிய விதியின் முக்கிய அம்சங்கள்
பயிற்சியாளர்கள்: ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஒரு பெண் பயிற்சியாளர் அல்லது உதவிப் பயிற்சியாளர் இருக்க வேண்டும். மருத்துவக் குழு: ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஒரு பெண் மருத்துவப் பணியாளர் இருக்க வேண்டும். அதிகாரிகள்: பெஞ்சில் அமரும் அதிகாரிகளில் குறைந்தது இரண்டு பேர் பெண்களாக இருக்க வேண்டும். இந்த புதிய விதிகள் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோர் மகளிர் உலகக்கோப்பை, 20 வயதுக்குட்பட்டோர் மகளிர் உலகக்கோப்பை மற்றும் ஃபிஃபா மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் இருந்து அமல்படுத்தப்படும். பின்னர், 2027இல் பிரேசிலில் நடைபெறவுள்ள மகளிர் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் இது கட்டாயமாக்கப்படும்.
மாற்றம்
ஏன் இந்த மாற்றம்?
ஃபிஃபாவின் 2023 ஆம் ஆண்டு ஆய்வின்படி, உலகளவில் வெறும் 5% பெண்கள் மட்டுமே பயிற்சியாளர்களாக உள்ளனர். 2023 மகளிர் உலகக்கோப்பையில் பங்கேற்ற 32 அணிகளில் 12 அணிகளுக்கு மட்டுமே பெண் தலைமைப் பயிற்சியாளர்கள் இருந்தனர். அரையிறுதி நிலைக்கு வந்தபோது, இங்கிலாந்தின் சரினா விக்மேன் மட்டுமே ஒரே பெண் பயிற்சியாளராக எஞ்சியிருந்தார். "இன்று பயிற்சியாளர் துறையில் போதிய அளவு பெண்கள் இல்லை. இந்த நிலையை மாற்ற தெளிவான வழிகளையும், வாய்ப்புகளையும் நாம் உருவாக்க வேண்டும்" என்று ஃபிஃபாவின் தலைமை கால்பந்து அதிகாரி ஜில் எல்லிஸ் தெரிவித்துள்ளார்.
திட்டங்கள்
உதவித் திட்டங்கள்
இந்த விதியை அமல்படுத்துவது மட்டுமல்லாமல், பெண்களுக்குப் பயிற்சியாளர் உதவித்தொகை மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களையும் ஃபிஃபா வழங்கி வருகிறது. 2021 முதல் 2024 வரை சுமார் 795 பெண் பயிற்சியாளர்களுக்கு ஃபிஃபா உதவித்தொகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.