LOADING...
எஃப்1 ரசிகர்களுக்கு ஏமாற்றம்; மத்திய கிழக்கு போரால் பஹ்ரைன், சவுதி கிராண்ட் ப்ரீ போட்டிகள் ரத்து
பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா எஃப்1 பந்தயங்கள் ரத்து

எஃப்1 ரசிகர்களுக்கு ஏமாற்றம்; மத்திய கிழக்கு போரால் பஹ்ரைன், சவுதி கிராண்ட் ப்ரீ போட்டிகள் ரத்து

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
07:45 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கிராண்ட் ப்ரீ பந்தயங்களை ரத்து செய்வதாக ஃபார்முலா 1 (எஃப்1) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 2026 சீசனின் மொத்த பந்தயங்களின் எண்ணிக்கை 22 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் வளைகுடா நாடுகளைப் பாதித்துள்ளன. ஏப்ரல் 10-12 தேதிகளில் பஹ்ரைனிலும், ஏப்ரல் 17-19 தேதிகளில் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலும் பந்தயங்கள் நடைபெறவிருந்தன. வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு இந்தப் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திட்டமிடவில்லை

வேறு இடங்களில் நடத்த திட்டமிடவில்லை

ரத்து செய்யப்பட்ட பந்தயங்களுக்குப் பதிலாக வேறு எந்த இடங்களிலும் பந்தயங்களை நடத்தப் போவதில்லை என்று எஃப்1 உறுதி செய்துள்ளது. இதனால், மார்ச் 27-29 தேதிகளில் நடைபெறும் ஜப்பான் கிராண்ட் ப்ரீ போட்டிக்கும், மே 1-3 தேதிகளில் நடைபெறவுள்ள மியாமி கிராண்ட் ப்ரீ போட்டிக்கும் இடையே சுமார் 5 வாரங்கள் நீண்ட இடைவெளி ஏற்படும். எஃப்1 மட்டுமின்றி, அதனுடன் நடைபெறவிருந்த எஃப்2, எஃப்3 மற்றும் எஃப்1 அகாடமி பந்தயங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அறிக்கை

எஃப்1 நிர்வாகத்தின் அறிக்கை

ஃபார்முலா 1இன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெபானோ டொமினிகாலி கூறுகையில், "இது ஒரு கடினமான முடிவு என்றாலும், தற்போதைய சூழலில் இதுவே சரியானது. பாதுகாப்பிற்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிப்போம்." என்று தெரிவித்துள்ளார். எஃப்ஐஏ தலைவர் முகமது பின் சுலாயமும், பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement