விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 இல் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை கைப்பற்றிய பிறகு, அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணியில் கேப்டனாக இருந்தார். எனினும் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்து வெளியேறியதை அடுத்து டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு டிசம்பரில் சவுரவ் கங்குலி தலைமையிலான பிசிசிஐ அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கியது. இந்த பதவி நீக்கம் கங்குலி மற்றும் கோலி இடையேயான மோதல் குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்தது. அதன் பின்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகினார்.
கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து சவுரவ் கங்குலி விளக்கம்
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு, கோலியின் கேப்டன்சி தொடர்பான சர்ச்சை குறித்து சவுரவ் கங்குலி முதன்முறையாக மனம் திறந்து பேசினார். கோலி டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக வந்த செய்தியை பார்த்தபோது தானும் ஆச்சரியப்பட்டதாகவும், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுமாறு பிசிசிஐ கூறவில்லை என்றும் தெரிவித்தார். கோலி ஏன் அந்த நேரத்தில் அப்படியொரு முடிவை எடுத்தார் என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்த கங்குலி, அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக கோலிக்கு மாற்றாக ரோஹித் ஷர்மா மட்டுமே சிறந்த தேர்வாக இருந்தார் என மேலும் கூறினார். எனினும், கோலி தலைமையில்தான் இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றது என கோலியை பாராட்டினார்.