விண்டோஸ் பயனர்களே உடனடியா இதை பண்ணுங்க; மைக்ரோசாஃப்ட் அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனம் அதன் குரோம் பிரவுசரில் உள்ள உயர் தீவிரப் பாதுகாப்பு பாதிப்புக்கு அவசரச் சரிபார்ப்பு (Emergency Update) வழங்கிய அதே வேளையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஒரு அதிமுக்கியமானப் பாதுகாப்புக் குறைபாடு குறித்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. விண்டோஸ் Kernelஇல் (இயங்குதளத்தின் மையப் பகுதி) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பூஜ்ஜிய-நாள் குறைபாடு (Zero-Day Vulnerability) மூலம், அங்கீகாரம் இல்லாத ஹேக்கர்களால் கணினி நிர்வாக உரிமைகளைப் பெற முடியும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் வெளியான 63 பாதுகாப்புக் குறைபாடுகளில், CVE-2025-62215 என்ற அடையாள எண் கொண்ட இந்தக் Kernel குறைபாடு மிக முக்கியமானது.
ரேஸ் கண்டிஷன்
ரேஸ் கண்டிஷன் பிழை
இது, ஒரே நேரத்தில் நடக்கும் செயல்பாடுகளில் உள்ள 'ரேஸ் கண்டிஷன்' (Race Condition) பிழையைப் பயன்படுத்திச் செயல்படுவதாக டெனபிள் நிறுவனத்தின் சத்னம் நாரங் தெரிவித்துள்ளார். இந்தக் குறைபாடு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் உறுதிப்படுத்தியுள்ளது. சாதாரணமாக, ஃபிஷிங் அல்லது வேறு சில வழிகள் மூலம் ஆரம்ப அணுகலைப் பெற்ற ஹேக்கர்கள், அதன் பிறகுத் தங்கள் உரிமைகளை அதிகரிக்க இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்துகின்றனர். இது மைக்ரோசாஃப்ட் மென்பொருளை இயக்கும் பெரும்பாலான சாதனங்களைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இது, பயனரின் தலையீடு இல்லாமல், இணையச் சேவைகளில் பதிவேற்றப்படும் தீங்கிழைக்கும் ஆவணங்கள் மூலம் தானாகவே தூண்டப்படக்கூடிய அபாயம் கொண்டது. எனவே, அனைத்து விண்டோஸ் பயனர்களும் தங்களின் கணினிகளை உடனடியாகப் புதுப்பித்துக் கொள்வது அவசர அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.