வெறும் பாறையாக மாறிய இமயமலை! லடாக்கில் விவசாயத்தைக் காக்க களமிறங்கிய ரோபோட்டிக் பனி கோபுரங்கள்! வியக்க வைக்கும் ஏஐஆர் தொழில்நுட்பம்
செய்தி முன்னோட்டம்
இமயமலையின் உறைவிடமான லடாக் யூனியன் பிரதேசத்தின் தொலைதூர கிராமங்கள், உலக வெப்பமயமாதல் காரணமாக மிகக் கடுமையான நீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. கோடை காலத்தில் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கிய குறைந்த உயரத்தில் அமைந்திருந்த இயற்கை பனிப்பாறைகள் அனைத்தும் உருகி வெறும் பாறைகளாக மாறிவிட்டன. இதனால், குளிர்காலப் பனிநீரை சேமித்து வசந்த காலத்தின் தொடக்கத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்த, லடாக் கிராம மக்கள் அதிநவீனத் தொழில்நுட்ப உதவியுடன் தங்களின் சொந்த செயற்கை பனிப்பாறைகளை உருவாக்கி வருகின்றனர்.
ஐஸ் ஸ்தூபி
ஐஸ் ஸ்தூபி முறையும் அதில் நிலவிய சவால்களும்
லடாக்கின் கடுமையான வறண்ட பாலைவனக் காலநிலை காரணமாக, அங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயிர் சாகுபடி செய்ய முடியும். மே மாத தொடக்கத்திலேயே பயிர்களை நட்டால்தான் குளிர்காலம் தொடங்குவதற்குள் அறுவடை செய்ய முடியும் என்பதால், வசந்த காலத்தின் தொடக்கத்திலேயே நீர் தேவைப்படுகிறது. இதற்காக 2010களின் தொடக்கத்தில், உயரமான பகுதிகளில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து, காற்றில் தெளிப்பதன் மூலம் ஐஸ் ஸ்தூபி எனப்படும் பனி கோபுரங்களை உருவாக்கினர். ஆனால், மைனஸ் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான கடுமையான குளிரில், குழாய்களுக்குள் தண்ணீர் உறைந்து அவை வெடித்துச் சிதறுவது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக இருந்தது.
தொழில்நுட்பம்
ஏஐஆர் (AIR) தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தீர்வு
பழைய ஐஸ் ஸ்தூபி முறையின் தோல்விகளைத் தொடர்ந்து, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் மற்றும் அக்ரெஸ் ஆஃப் ஐஸ் (Acres of Ice) என்ற தனியார் நிறுவனம் இணைந்து ஆட்டோமேட்டட் ஐஸ் ரிசர்வயர் (Automated Ice Reservoir - AIR) என்ற புதிய தானியங்கி அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பில், உயரமான பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், பள்ளத்தாக்கின் தரைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நீரூற்றுப் பகுதிக்கு அழுத்தத்துடன் கொண்டு வரப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த நீர் ஓட்டமும் சோலார் பேனல்கள் மூலம் இயங்கும் கணினி அமைப்பால் துல்லியமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
செயற்கை பனி
கணினி மற்றும் சென்சார்கள் மூலம் பனி உருவாக்கம்
இந்த ஏஐஆர் அமைப்பில் உள்ள வானிலை நிலையச் சென்சார்கள், காற்றின் வெப்பநிலை மற்றும் குழாய்க்குள் இருக்கும் நீரின் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும். வெப்பநிலை மிக வேகமாக வீழ்ச்சியடையும் போது, குழாய்கள் வெடிப்பதைத் தடுக்க கணினி அமைப்பு தானாகவே மேல் வால்வை மூடி, கீழ் வால்வு வழியே தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றிவிடும். மேலும், தண்ணீரைத் தொடர்ச்சியாகத் தெளிக்காமல், நிலவும் காற்று மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப, முந்தைய பனி அடுக்கு உறைந்த பின்னரே அடுத்தடுத்த பனித் துளிகளைப் பனிமழை போலத் தெளித்து, தண்ணீரை 100 சதவீதம் பனிக்கட்டியாக மாற்றுகிறது.
கிராமப்புற வாழ்வாதாரம்
நிலத்தடி நீர் உயர்வு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரப் பாதுகாப்பு
இந்த அதிநவீன ஏஐஆர் தொழில்நுட்பம் லடாக் கிராமங்களில் மிக முக்கிய நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த குளிர்காலத்தில் லடாக் முழுவதும் வெற்றிகரமாக 10 ஏஐஆர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் பனிக்கட்டிகள் உருகி, நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, வறண்டு போன நீர் ஊற்றுகளும் மீண்டும் உயிர் பெறத் தொடங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் துறை பொறியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து, நகரங்களை நோக்கி இடம்பெயரவிருந்த லடாக் இளைஞர்களுக்கு, இந்தத் தொழில்நுட்பப் பனிப்பாறைகள் மறுவாழ்வு அளித்து, கிராமிய விவசாயத்தை மீட்டெடுத்துள்ளன.