டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்களின் உருவாக்கமும், பரவலும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, இந்த டீப் ஃபேக் வீடியோக்களின் நம்பகத்தன்மை தான் மிகவும் பிரச்சினைக்குரிய விஷயமாக இருக்கிறது. பிரபலங்களின் முகங்களை வைத்து உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்களில் நிஜம் எது போலி எது என்றே தெரியாத அளவிற்கு மிகவும் துல்லியமாக அவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படியான தொழில்நுட்பங்களை மிகவும் பொறுப்புடன் நாம் கையாள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தார். இந்நிலையில், அதிகரித்து வரும் இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
டீப் ஃபேக் வீடியோக்களின் உருவாக்கம் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை:
தகவல் தொழில்நுட்ப விதிமீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து புகாரளிக்க மற்றும் தெரியப்படுத்த புதிய வலைத்தளம் ஒன்றை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை புதிய வலைத்தளம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ராஜீவ் சந்திரசேகர். அத்தளத்தின் உதவியுடன் தகவல் தொழில்நுட் விதிமீறல் குறித்து முதல் தகவல் அறிக்கையையும் பயனாளர்கள் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவித்திருக்கிறார். இந்த முதல் தகவல் அறிக்கையானது குறிப்பிட்ட தளத்தின் அதிகாரிகள் மீதே பதிவு செய்யப்படும் எனவும், ஒரு உள்ளடக்கம் எங்கிருந்து பகிரப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுவதைத் தொடர்ந்து, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு மாற்றப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார் அவர். ஏழு நாட்களுக்குள் இதற்கேற்றவாது தங்களது விதிமுறைகள் நிறுவனங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
போலி தகவல்களைத் தடுக்க ஆன்லைன் தளங்களே பொறுப்பு:
டீப் ஃபேக் போன்ற தவறான மற்றும் போலியான உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு ஆன்லைன் தளங்களுக்கே அதிகமாக இருக்கிறதென சுட்டிக்காட்டியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். அதன்படி, ஒரு உள்ளடக்கம் தவறானது அல்லது போலியானது என பயனாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட 36 மணி நேரத்திற்குள், அந்த உள்ளடக்கத்தை நீக்க ஆன்லைன் தளங்கள் நீக்கியாக வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான மற்றும் தவறான உள்ளடக்கங்களை உருவாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.