திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்: லாகின் செய்ய முடியாமல் தவிக்கும் பயனர்கள்; என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம், செவ்வாய்க்கிழமை அன்று திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலியை அணுக முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். முக்ககியமாக அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கூடுதல் விவரங்கள் இங்கே:-
பாதிப்புகள்
ஆயிரக்கணக்கான புகார்கள் மற்றும் பாதிப்புகள்
வெவ்வேறு பகுதிகளில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்காணிக்கும் 'டௌன்டெக்டர்' தளத்தின்படி, அமெரிக்காவில் மட்டும் 10,700-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் சுமார் 252 பயனர்களும், பிரிட்டனில் 135 பயனர்களும் இந்தப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பயனர்களில் 77 சதவீதம் பேர் செயலியை அணுகுவதில் சிக்கல் இருப்பதாகவும், மற்றவர்கள் இணையதளம் மற்றும் சர்வர் இணைப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மௌனம்
மெட்டா நிறுவனத்தின் மௌனம்
நியூயார்க், சிகாகோ, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் போன்ற அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இந்தப் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பதிவாகியுள்ளது. சில பயனர்களுக்குப் பதிவுகளைப் பதிவிடுவதிலும், சிலருக்கு முகப்புப் பக்கத்தை புதுப்பிப்பதிலும் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இருப்பினும், இந்தத் திடீர் முடக்கம் குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் தளம் சந்தித்துள்ள இந்த பெரிய அளவிலான முடக்கம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.