Page Loader
பயனர் தரவைத் திருடும் 300 செயலிகளை பிளேஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்
பயனர் தரவைத் திருடும் 300 செயலிகள் பிளேஸ்டோரிலிருந்து நீக்கம்

பயனர் தரவைத் திருடும் 300 செயலிகளை பிளேஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2025
08:04 pm

செய்தி முன்னோட்டம்

பயனர் தரவைத் திருடுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கூகுள் சுமார் 300 செயலிகளை பிளேஸ்டோரிலிருந்து அகற்றியுள்ளது. இந்த செயலிகள் ஆண்ட்ராய்டு 13 பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து, ரகசியமாக தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தன. அகற்றப்படுவதற்கு முன்பு இந்த செயலிகள் 60 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த செயலிகளில் பல வேப்பர் எனப்படும் பெரிய மோசடி நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் திரெட் லேபின் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினர். அவர்கள் தனிப்பட்ட விவரங்களைத் திருடியது மட்டுமல்லாமல், ஃபிஷிங் மோசடிகள் மூலம் கிரெடிட் கார்டு தகவல்களை வெளிப்படுத்த பயனர்களை ஏமாற்றினர். கூடுதலாக, இந்த மொபைல் ஆப்ஸ் சுமார் 200 மில்லியன் போலி விளம்பர கோரிக்கைகளை உருவாக்கி, பயனர்களையும் விளம்பரதாரர்களையும் பாதித்தன.

போலி செயலிகள்

தீங்கிழைக்கும் போலி செயலிகள்

இந்த தீங்கிழைக்கும் மொபைல் ஆப்ஸ்கள் தங்களை சுகாதார கண்காணிப்பாளர்கள், கியூஆர் ஸ்கேனர்கள் மற்றும் வால்பேப்பர் ஆப்ஸ்களாக காட்டப்பட்டுள்ளன. அவை மொபைல்களில் மறைக்கலாம், பெயர்களை மாற்றலாம் மற்றும் பயனர் தொடர்பு இல்லாமல் பின்னணியில் இயங்கலாம். சில முழுத்திரை விளம்பரங்களைக் கூடக் காட்டுகின்றன, இதனால் அவற்றைக் கண்டறிவது கடினம். அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க, ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் சாதனங்களை சமீபத்திய மென்பொருள் பதிப்பிற்கு புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ்களைச் சரிபார்த்து, சந்தேகத்திற்குரியவற்றை அகற்றுவதும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆப்ஸ்களைப் பதிவிறக்கும் போது பாதுகாப்பாக இருக்க, பயனர்கள் நம்பகமான டெவலப்பர்களிடமிருந்து மட்டுமே ஆப்ஸ்களை பதிவிறக்க வேண்டும். ரிவியூஸ்களை கவனமாகப் படிக்க வேண்டும் மற்றும் ஆப் அனுமதிகளைச் சரிபார்க்க வேண்டும்.