பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியம் உடைந்தது! கருப்பொருள் பற்றிய முதல் தடயம்; அமெரிக்க ஆய்வகத்தில் வரலாற்றுச் சாதனை
செய்தி முன்னோட்டம்
பிரபஞ்சத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைந்துள்ள, கண்ணுக்குத் தெரியாத கருப்பொருள் பற்றிய முதல் சாத்தியமான தடயத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உட்பட 6 நாடுகளைச் சேர்ந்த 250 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவினர், அமெரிக்காவின் சவுத் டகோட்டாவில் உள்ள சுரங்கப் பகுதியில் ஒரு மைல் ஆழத்தில் அமைக்கப்பட்ட நிலத்தடி ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
கண்டுபிடிப்பு
லக்ஸ்-ஜெப்ளின் (LUX-ZEPLIN) கருவியின் அதிநவீன கண்டுபிடிப்பு
உலகின் மிகவும் உணர்திறன் மிக்க லக்ஸ்-ஜெப்ளின் (LUX-ZEPLIN) துகள் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் தரவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு அணுவும், அடையாளம் தெரியாத புதிய துகளொன்றும் மோதிக்கொள்வதை அவர்கள் கண்டறிந்தனர்.
இந்தத் துகள் மோதலானது, கருப்பொருளை உருவாக்கும் விம்ப் (WIMP - Weakly Interacting Massive Particle) என்ற துகளாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சான்றுகள்
சுயாதீன ஆய்வு மற்றும் புள்ளிவிவரச் சான்றுகள்
ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், பிற சுயாதீன ஆராய்ச்சியாளர்களின் முழுமையான மறுஆய்வுக்கு இது இன்னும் உட்படுத்தப்படவில்லை.
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான நிலையான வரம்பு 5 சிக்மா (Sigma) என்பதாகும்.
ஆனால், தற்போது கண்டறியப்பட்ட இந்தத் துகள் நிகழ்வு 2.6 சிக்மா அளவிலேயே உள்ளது.
இதனால் இது கருப்பொருள் தான் என்பதை உடனடியாக உறுதியாகக் கூற முடியாது எனப் பேராசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எதிர்பார்ப்புகள்
அறிவியல் உலகின் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள்
இதுவரை அறியப்பட்ட அறிவியல் காரணங்கள் எதுவும் இந்தத் துகள் மோதலுக்குப் பொருத்தமாக இல்லை என்பதால், இது கருப்பொருள் குறித்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கான முதல் படியாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும் பல தரவுகளைத் திரட்டி ஆய்வு செய்யும் போது மட்டுமே இது உண்மையான கருப்பொருளா என்பது முழுமையாக உறுதி செய்யப்படும்.