மெட்டாவைத் தொடர்ந்து டிஸ்கார்ட்! ஆன்லைன் சிறுவர் பாதுகாப்பில் புகாரால் எழுந்த புதிய சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளங்களில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாகக் கூறி, பிரபல மெசேஜிங் செயலியான டிஸ்கார்ட் மீது பிரேசில் அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்காததால் 97 மில்லியன் டாலர் (சுமார் ₹800 கோடி) இழப்பீடு கோரி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிகளுக்குக் கட்டுப்படத் தவறினால் நாளொன்றுக்கு 5,00,000 பிரேசிலியன் ரியல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தடை விதிப்பு
லைவ்ஸ்ட்ரீமிங் தடை மற்றும் பிரேசில் அரசின் கெடுபிடிகள்
சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரேசிலின் தகவல் பாதுகாப்பு ஆணையம், டிஸ்கார்ட் செயலியின் லைவ்ஸ்ட்ரீமிங் வசதியை ஏற்கனவே தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்திருந்தது.
பயனர்களின் வயதை சரிபார்த்தல், பெற்றோரின் கட்டுப்பாட்டு வசதிகள் மற்றும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்கும் முறைகளை டிஸ்கார்ட் பலப்படுத்த வேண்டும் எனப் பிரேசில் வலியுறுத்தியுள்ளது.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தத் தவறினியால், பிரேசில் அரசு தற்பொழுது நீதிமன்றத்தில் இந்த சட்டப் போராட்டத்தைத் தொடங்கியது.
மறுப்பு
குற்றச்சாட்டுகளை மறுக்கும் டிஸ்கார்ட் நிறுவனம்
பிரேசில் அரசின் இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை விகிதாசாரமற்றது என்றும், தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக பிரதிபலிக்கவில்லை என்றும் டிஸ்கார்ட் நிறுவனம் மறுத்துள்ளது.
அந்நாட்டின் சட்டத்திற்குட்பட்டு இயங்கத் தேவையான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் நிதியுதவிகள் குறித்த முன்மொழிவை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், டிஸ்கார்ட் நிறுவனம் உறுதியளித்தபடி உடன்படிக்கையை முன்னெடுத்து செல்லவில்லை என பிரேசில் நாட்டின் தலைமை வழக்கறிஞர் ஜார்ஜ் மெஸ்சியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நெருக்கடி
மெட்டாவைத் தொடர்ந்து டிஸ்கார்ட் மீதான சர்வதேச நெருக்கடி
சிறுவர்களின் மனநலனை பாதித்ததாகக் கூறி மெட்டா நிறுவனம் சமீபத்தில் 16.68 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது டிஸ்கார்ட் செயலியும் சிக்கியுள்ளது.
கூகுள், டிக் டாக், ஸ்னாப்சாட் போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் உலகளவில் இத்தகைய கடுமையான பாதுகாப்பு விதிகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு வருகின்றன.
ஆன்லைன் உலகில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச அளவில் அரசுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளுக்கு இந்த வழக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.