ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1'
திட்டமிட்டபடியே நண்பகல் 11.50 மணிக்கு இஸ்ரோவின் PSLV-C57 ராக்கெட் மூலம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1 விண்கலம். நிலவில் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3யானது அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று தங்களுடைய அடுத்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. தற்போது விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா L1 விண்கலமானது நான்கு மாத காலங்கள் பயணம் செய்து, சூரியன் மற்றும் பூமிக்கு இடையே 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கக்கூடிய முதலாம் லெக்ராஞ்சு (L1) புள்ளியை அடையவிருக்கிறது. அந்தப் புள்ளியில் இருந்தே சூரியனைத் தொடர்ந்து ஆய்வு செய்யவிருக்கிறது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏழு அறிவியல் உபகரணங்கள் ஆதித்யா L1 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன.