ஆதித்யா L1 ஏவல் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது இஸ்ரோ
திட்டமிட்டபடியே ஆதித்யா L1 விண்கலத்தின் ஏவலை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. இந்திய நேரப்படி இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து PSLV-C57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1.. ஏவுதலுக்குப் பிறகு, அனைத்து நிலைகளும் சரியாகச் செயல்பட்டு ஆதித்யா L1 விண்கலமானது 63வது நிமிடத்தில் ராக்கெட்டின் அனைத்து நிலைகளிலிருந்தும் பிரிந்திருக்கிறது. ஆதித்யா L1 தனியாகப் பிரிந்து பூமியைச் சுற்றிவரும் முதற்கட்டப் பயணத்தைத் தொடங்கியதுடன், இன்றைய ஏவல் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தொடங்கி 125 நாட்களுக்குப் பிறகு, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே உள்ள முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் நிலைநிறுத்தப்படவிருக்கிறது ஆதித்யா L1. ஆதித்யா L1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ.