ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்தியாவை மலிவான விலையில் சுற்றி வர ரயில் பயணம் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான வழியாகும். முன்பெல்லாம் ரயில் டிக்கெட்டுகளை வாங்க மக்கள் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அவர்கள் தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தி உடனடியாக புக் செய்து கொள்ள முடியும். சிலர் தங்கள் டிக்கெட்டுகளை விரைவாகப் பெற கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கலில் பெற்றுக்கொள்கிறார்கள். இருப்பினும், ரயிலில் இருக்கையை முன்பதிவு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. சில நேரங்களில், பயணத் தேதி நெருங்க நெருங்க, இருக்கை கிடைப்பது கடினமாகிறது. அதையும் மீறி சில நேரங்களில் முன்பதிவு செய்யும் போது சிலருக்கு, RAC டிக்கெட் கிடைக்கப்பெறும்.
RAC பிரிவு
RAC என்றால் Reservation Against Cancellation என்று அர்த்தமாகும். யாராவது டிக்கெட்டை ரத்து செய்தால், நீங்கள் confirmed berth பெறலாம். இல்லையேல், உங்களுக்கு அமர ஒரு சீட் மட்டும் அனுமதிக்கப்படும். இரண்டு பேர் RAC டிக்கெட்டை பெறும்போது, ஒரே பெர்த்தை (Berth) பகிர்ந்து கொள்ள வேண்டும். அதாவது கோச்சில் இருக்கும் சைடு lower பெர்த் அவர்களுக்கு ஒதுக்கப்படும். அவர்கள் இருவரும் ஷேர் செய்துகொள்ளலாம். இருவரும் சம்மதித்தால் மாறி மாறி தூங்கலாம். முன்பெல்லாம், AC கோச்சில் RAC டிக்கெட் வைத்திருந்தால், தலையணை, போர்வை, பெட்ஷீட் கிடைக்காது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர், ரயில் சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டபோது, RAC பயணிகளுக்கும் போர்வையும் தலையணையும் தரப்படும் என உத்தரவிடப்பட்டது.