LOADING...
நீரிழிவு விழித்திரை நோய்க்குப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு: ஏஐ உதவியுடன் ஆரம்பத்திலேயே கண்டறியத் திட்டம்
நீரிழிவு விழித்திரை நோய்க்குப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு

நீரிழிவு விழித்திரை நோய்க்குப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு: ஏஐ உதவியுடன் ஆரம்பத்திலேயே கண்டறியத் திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2025
05:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு விழித்திரை நோயின் (Diabetic Retinopathy) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுவதும் எளிதாக இயக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான (ஏஐ) ரெட்டினல் இமேஜிங் முறையைப் பரவலாகப் பயன்படுத்தி, ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிய இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. இந்தியாவில் தற்போது சுமார் 10.1 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 1.26 கோடிப் பேருக்குக் கண் தொடர்பான சிக்கல்கள் இருப்பதாகவும், கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் நிரந்தரப் பார்வையின்மை ஆபத்தில் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. நீடித்த உயர் இரத்த சர்க்கரை அளவுகளால் விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் ஏற்படுகிறது.

பார்வை இழப்பு

நோய் முற்றினால் பார்வை இழப்பு அபாயம்

நோய் முற்றிய நிலையில் பார்வை இழப்பு பெரும்பாலும் மீட்க முடியாததாகிவிடுகிறது. சமீபத்திய வழிகாட்டுதல்கள், நீரிழிவு நோயாளிகளில் 80% பேருக்கு விழித்திரை பரிசோதனைக் கவரேஜை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு கண் பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றன. தற்போது, இந்தியாவில் 85% நீரிழிவு நோயாளிகளுக்குத் தங்கள் நிலை கண்பார்வையைப் பாதிக்கும் என்பது தெரியாது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் கடுமையான பார்வை இழப்பு அபாயத்தை பாதியாகக் குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு நீரிழிவு நோயாளிக்கும் கட்டாய ஆண்டு விழித்திரைச் சோதனையை அறிமுகப்படுத்தவும், நோய்த் தடுப்புப் பராமரிப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் பரிந்துரைக்கின்றன.

சோதனை

ஏஐ அடிப்படையிலான சோதனை

ஆரம்ப நிலைப் பரிசோதனையில் ஏஐ அடிப்படையிலான ஃபண்டஸ் இமேஜிங்கும், இரண்டாம் நிலை மையங்களில் Optical Coherence Tomography (OCT) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும். மேலும், லேசர் மற்றும் ஆன்டி-VEGF சிகிச்சை போன்ற அத்தியாவசிய சிகிச்சைகளை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சேர்க்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.