கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்று ஆருடம் கூறிய பைரவா நாய்
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியான நிலையில், அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பது தொடர்பாக கருத்துக்கணிப்புகள் பல தரப்புகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாண்டியாவில் உள்ள கோபி என்பவர் வளர்க்கும் நாய் ஆருடம் கூறியுள்ளது. பைரவா என அழைக்கப்படும் இந்த நாய் ஆருடம் கணிப்பதில் திறன் பெற்றது என்று கூறப்படுகிறது. இதுவரை இது கணித்த அனைத்தும் பலித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
முன்னாள் முதல்வர் புகைப்படத்தினை கவ்விய பைரவா
இதனையடுத்து கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கோபி நேற்று முன்தினம் கால பைரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், பைரவா நாய் முன்பு, முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரின் புகைப்படங்களை வைத்துள்ளார். தொடர்ந்து இதில் யார் அடுத்த முதல்வராக போகிறார்கள் என்று கோபி பைரவாவிடம் ஆருடன் கேட்டுள்ளார். அப்போது பைரவா நாய் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் புகைப்படத்தினை வாயில் கவ்வி எடுத்து, இவரே அடுத்த கர்நாடகா முதல்வர் என்று கணித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பைரவா கணித்த அனைத்தும் பலித்துள்ள நிலையில் இதுவும் பலிக்குமா? என்பது வரும் மே 13ம் தேதி தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.