LOADING...
#ShameOnUGC; சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! UGCயின் புதிய ஈக்விட்டி விதிகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானதா?
UGCயின் புதிய உயர்கல்வி விதிமுறைகளால் சர்ச்சை

#ShameOnUGC; சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! UGCயின் புதிய ஈக்விட்டி விதிகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானதா?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2026
02:45 pm

செய்தி முன்னோட்டம்

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ஒழுங்குமுறைகள், 2026 (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. ரோஹித் வெமுலா மற்றும் பயல் தத்வி ஆகியோரின் தாயார்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை

சர்ச்சைக்குரிய சாதி பாகுபாடு வரையறை

சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள மிக முக்கியமான அம்சம், இந்த விதிமுறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள வரையறை ஆகும். யுஜிசி வரையறை: சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக, சாதி அல்லது பழங்குடி அடிப்படையில் மட்டுமே காட்டப்படும் பாகுபாட்டைக் குறிக்கும். இந்த வரையறைதான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஏனெனில், இது பாகுபாடு என்பதை ஒருதலைப்பட்சமாகப் பார்ப்பதாகப் பொதுப்பிரிவு மாணவர்கள் மற்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்ப்பு

ஏன் இந்த எதிர்ப்பு?

சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் #ShameonUGC என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்கள் இதோ: பொதுப்பிரிவினருக்குப் பாதுகாப்பில்லை: சாதி பாகுபாடு என்பது SC/ST/OBC பிரிவினருக்கு எதிராக நடப்பது மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளதால், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகளுக்கு இந்த விதிகளில் இடமில்லை என்று கூறப்படுகிறது. பொய் புகார்கள் குறித்த அச்சம்: இந்த விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களைத் தண்டிப்பதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்றும், பொய் புகார்களில் இருந்து தற்காத்துக்கொள்ள எந்த வழிமுறையும் இல்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.

Advertisement

பாகுபாடு

பொதுப்பிரிவினருக்கு பாகுபாடு

சமத்துவக் குழுக்களின் அமைப்பு: கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும் சம வாய்ப்பு மையங்களில் (Equal Opportunity Centre) SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவினருக்கு இடமில்லாதது பாரபட்சமானது என அவர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டுக் கல்விக்கான அழைப்பு: இந்தியப் பல்கலைக்கழகங்கள் சாதிப் போர்க்களங்களாக மாறி வருவதாகவும், திறமைக்கு மதிப்பளிக்கும் வெளிநாடுகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பிவிடுங்கள் என்றும் விரக்தியில் சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

யுஜிசி

யுஜிசியின் நோக்கம் மற்றும் சமத்துவ மையம்

எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் எதிர்கொள்ளும் கடுமையான அழுத்தங்களைக் குறைப்பதே யுஜிசியின் நோக்கம். ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் ஒரு சம வாய்ப்பு மையம் அமைக்கப்படும். இந்த மையம் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். பின்தங்கிய மாணவர்களுக்குத் தேவையான கல்வி மற்றும் நிதி வழிகாட்டல்களை இந்த மையம் வழங்கும்.

சமத்துவம்

சமத்துவம் குறித்த சர்ச்சை

தற்போதைய சர்ச்சை என்பது, சமத்துவம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட விதிகள், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறிவைப்பதாக உள்ளதா அல்லது வரலாற்று ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறதா என்பதைச் சுற்றியே அமைந்துள்ளது. இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்போது, கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமான சூழல் நிலவுமா அல்லது பிளவுகள் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement