அயோத்தி விமான நிலையத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு! உடான் திட்டத்தை 2037 வரை நீட்டிக்க பிரதமர் மோடி திட்டம்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் மிக முக்கியமான பிராந்திய விமான இணைப்புத் திட்டமான உடான் (UDAN) தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10,169 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் தனியார் குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ அதிகபட்ச மானியத் தொகையைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை 4 ஆம் தேதி ஜோத்பூர் நகருக்கு மேற்கொள்ளவிருக்கும் அரசுப் பயணத்தின் போது, இந்த உடான் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு, அதாவது வரும் 2037 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனத்திற்குப் பாய்ந்த 1,157 கோடி மானியம்
உடான் திட்டத்தின் கீழ் லாபகரமாக இயங்க முடியாத சிறிய நகரங்களின் விமான வழித்தடங்களை ஊக்குவிக்க அரசு 'VGF' எனப்படும் மானிய நிதியை வழங்குகிறது. இதன்படி ஒட்டுமொத்தமாக 4,669.02 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளதில், இண்டிகோ நிறுவனம் மட்டுமே அதிகபட்சமாக 1,157.13 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அலையன்ஸ் ஏர் 994.99 கோடி ரூபாயும், கோடாவத் 684.90 கோடி ரூபாயும், ஸ்பைஸ்ஜெட் 654.13 கோடி ரூபாயும் பெற்றுள்ளன. இந்த முன்னணி நிறுவனங்களே ஒட்டுமொத்த மானியத்தில் 83 சதவீதத்தை சுருட்டியுள்ளன.
அயோத்தி
உள்கட்டமைப்பில் முதலிடம் பிடித்த அயோத்தி விமான நிலையம்
விமான நிலையங்கள், ஹெலிபேடுகள் மற்றும் நீர் வழித்தடங்களை மேம்படுத்த அரசு 5,500 கோடி ரூபாய் ஒதுக்கியதில், இதுவரை 4,833.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதி உதவியின் மூலம் நாட்டின் 185 சிறிய ரக விமான நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி விமான நிலையம் அதிகபட்சமாக 347.41 கோடி ரூபாய் நிதியைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர் விமான நிலையம் 333.29 கோடி ரூபாய் நிதியைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
அந்தமான்
அந்தமான் மற்றும் லட்சத்தீவுகளிலும் புதிய வசதிகள்
இந்த உடான் திட்டத்தின் மூலம் உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் போன்ற மலைப் பிரதேசங்களில் அவசரத் தேவைகளுக்காகப் பிரம்மாண்ட ஹெலிபேட் நெட்வொர்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் எல்லைப் பகுதிகளான லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடல் வழி விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் புதிய நீர் வழித்தட மேம்பாட்டுத் திட்டங்களும் இத்திட்டத்தின் கீழ் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.