LOADING...
நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?
நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு

நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2025
01:30 pm

செய்தி முன்னோட்டம்

அதிகப்படியானப் பணி நெருக்கடி மற்றும் கூடுதல் பணிப்பளுவைக் களைய வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம் செவ்வாய் கிழமை (நவம்பர் 18) முதல் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட அனைத்து வருவாய்த் துறை ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று சங்கம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பதற்காக நவம்பர் 4 முதல் தொடங்கியுள்ள SIR பணிகள், வருவாய்த் துறை ஊழியர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளதாகச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பணிகள் வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் தவறான விவரங்களை நீக்குவதை உள்ளடக்கியது ஆகும்.

கோரிக்கைகள்

சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் போராட்ட வடிவம்

கூடுதல் பணிப்பளுவைக் கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். செவ்வாய் கிழமை முதல் SIR பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பணிகளை முழுமையாகப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் சங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம், டிசம்பர் 9 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் முடிவடைய உள்ள தேர்தல் ஆணையத்தின் SIR பணிகளைப் பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தலையிட்டு, ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று சுமூகமான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.