தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று(மார்ச்.,16) சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சரை சந்தித்து பால் உற்பத்தியாளர் நல சங்கம் கொள்முதல் விலையினை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொது செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஆவின் பால் கொள்முதல் 36 லட்சம் லிட்டரில் இருந்து தற்போது 27 லட்ச லிட்டராக குறைந்துள்ளது. அதே போல் நுகர்வோருக்கு தரமான பால் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை
இதற்கு தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தை விட பால் ஒரு லிட்டருக்கு ரூ.6 முதல் 12 வரை கொடுத்ததுத்தான் காரணம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பசும்பாலுக்கு ரூ.55 ஆகவும், எருமை பாலுக்கு ரூ.68 ஆகவும் கொள்முதல் விலையினை உயர்த்தி கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் ஆர்.ராஜேந்திரன், 'அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, திட்டமிட்ட படி பால் நிறுத்த போராட்டம் தொடங்கும்' என கூறியது குறிப்பிடத்தக்கது.