Page Loader
தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு

தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு

எழுதியவர் Nivetha P
Feb 01, 2023
01:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நவம்பர் 15ம் தேதி முதல் 2,811 மின் பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது. இந்த இணைப்பிற்கான கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதி என்று கூறப்பட்டு, பின்னர் ஜனவரி 31ம் தேதி என்று மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி, ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் இறுதி வாய்ப்பாக ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடைசி வாய்ப்பு

இறுதி வாய்ப்பாக கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

இதுகுறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துவங்கி 78நாட்கள் ஆகியுள்ளது. 2.67 கோடி மின் இணைப்பில் தற்போது வரை 2.42கோடி மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது, 90.69சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் 9.31சதவீதம் பேர் இணைக்கவேண்டியுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து, மீதமுள்ள 9.31சதவீத மின்நுகர்வோரும் வரும் 15ம்தேதிக்குள் இணைப்பினை மேற்கொள்ள வேண்டும். இறுதி வாய்ப்பாக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இனி மின்வாரியம் சார்பில் கால அவகாசம் என்பது அளிக்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.