ORSL வாங்குறீங்களா? மக்களே உஷார்! உண்மையான ஓஆர்எஸ் எது? உணவு பாதுகாப்புத்துறை அதிரடி விளக்கம்!
செய்தி முன்னோட்டம்
கோடைக்கால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நீர்ச்சத்து இழப்பால் (Dehydration) பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்காக மருந்தகங்களில் விற்கப்படும் ஓஆர்எஸ் (ORS) மற்றும் ஓஆர்எஸ்எல் (ORSL) ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்க, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அதிரடி விளக்கத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
எதை எப்போது பயன்படுத்த வேண்டும்?
ORS மற்றும் ORSL
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் நேரங்களில், உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகரித்த ORS (Oral Rehydration Salts) மட்டுமே மருந்தாக வழங்கப்பட வேண்டும். இது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படும் ஒரு மருந்தாகும். குழந்தைகளின் நீர்ச்சத்து குறைபாட்டிற்குப் பெற்றோர்கள் 'WHO' என்று குறிப்பிடப்பட்டுள்ள ORS-ஐயே வாங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை இந்திய உணவு பாதுகாப்புத் துறை அங்கீகாரத்துடன் பழச்சாறு அடிப்படையில் தயாரிக்கப்படும் பானங்களாகும். இவை ORSL, ORSL Plus, ORS Fit போன்ற பெயர்களில் விற்கப்படுகின்றன.
மருந்தகங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை
தவறான விளம்பரம் கூடாது
மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்குத் துறை ரீதியாகப் பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது என்று கூறி ORSL உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்யக்கூடாது. ORSL என்பது பழச்சாறு அடிப்படையில் தயாரிக்கப்படுவது என்பதைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்திய பின்னரே விற்பனை செய்ய வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு வேண்டுகோள்
பொதுமக்கள் கவனத்திற்கு
பொதுமக்கள் ஓஆர்எஸ் மற்றும் ஓஆர்எஸ்எல் வாங்கும் போது, அட்டையின் மீதுள்ள நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட இடம், காலாவதி தேதி மற்றும் உரிமம் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். நீர்ச்சத்து இழப்பிற்கான உண்மையான மருந்து எது என்பதைக் கண்டறிந்து வாங்குவதுடன், இதுகுறித்த விழிப்புணர்வைப் பிறருக்கும் பகிருமாறு உணவு பாதுகாப்புத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.