LOADING...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2025
10:28 am

செய்தி முன்னோட்டம்

2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்கால சான்றிதழில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தலைமை ஆசிரியர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், கைபேசி எண் போன்ற விவரங்களைத் தேர்வுத்துறை இணையதளத்தில் நவம்பர் 19 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது, மாணவர்களின் நலன் கருதி, இந்த அவகாசம் நவம்பர் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்

பெயர் மற்றும் பிறந்த தேதி: மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பெயர் மாற்றம்: அரசிதழில் (Gazette) பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அதன் நகலைப் பெற்று, அதன் அடிப்படையில் திருத்தம் செய்ய அனுமதி உண்டு. புகைப்படம்: சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள்: தேர்வில் சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், அதற்கான மருத்துவச் சான்றிதழ்களைக் கண்டிப்பாக இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள்

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

இந்த விவரங்களின் அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இந்தப் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவேற்றப்படும் தகவல்களில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தேர்வு முடிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு திருத்தங்கள் கோரினால் அது பரிசீலிக்கப்பட மாட்டாது.