
பழனி மற்றும் சபரிமலையில் பரஸ்பரம் நிலங்களை பரிமாறப்போகும் தமிழக, கேரளா அரசுகள்; ஏன்?
செய்தி முன்னோட்டம்
சபரிமலை மற்றும் பழனி ஆகிய இரு முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது விளக்கமளித்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் சுமார் 30% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, சபரிமலை சன்னிதானத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்குமாறு கேரள அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு பதிலளித்த கேரளா, தமிழகத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வரும் கேரள பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை வைத்தது.
அறிவிப்புகள்
மற்ற முக்கிய அறிவிப்புகள்
பழனியில் 5 ஏக்கர் நிலம் வழங்கினால், சபரிமலையில் நிலம் தரத் தயாராக இருப்பதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார். இந்த நிலப் பரிமாற்றத்தின் மூலம், இரு மாநில பக்தர்களுக்கும் அவரவர் புனித யாத்திரையின் போது கூடுதல் வசதிகள் கிடைக்கும். கண்ணகி கோவில்: கேரளாவில் உள்ள கண்ணகி அம்மன் கோவிலை சீரமைத்து, அங்கு செல்லும் பாதையை மேம்படுத்த அனுமதி வழங்குமாறு கேரளா அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை விழா நாட்களில், தமிழக பக்தர்களுக்கு உதவ, சன்னிதானத்தில் சுழற்சி முறையில் இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறை மற்றும் உணவு வசதிகளை கேரள அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.