தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: பெண்களின் பாதுகாப்புக்காக 1091 பிரத்யேக உதவி எண் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் அளிக்கப்பட்ட முக்கியப் வாக்குறுதியின்படி, பெண்களின் அவசரக்கால உதவிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எந்நேரமும் தொடர்பு கொள்வதற்காக பிரத்யேக 1091 என்ற கட்டணமில்லா உதவி எண்ணும் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
அவசர கட்டுப்பாட்டு அறை
112 அவசரக் கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைப்பு
இந்த புதிய 1091 உதவி எண் திட்டம், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 112 அவசரகால எண்ணுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு பெண் ஆபத்து காலத்தில் 1091 என்ற எண்ணை அழைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, பாதிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகில் இருக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படையின் ரோந்து வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் சென்றடையும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீடு
முதற்கட்டமாக ₹354 கோடி நிதி ஒதுக்கீடு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்திற்காக தமிழக அரசு முதற்கட்டமாக ₹354 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2,500க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் படையானது எவ்வித சட்டம்-ஒழுங்கு அல்லது இதர பாதுகாப்புப் பணிகளுக்குத் திருப்பப்படாமல், முழுக்க முழுக்கப் பெண்களின் பாதுகாப்புப் பணிகளில் மட்டுமே பிரத்யேகமாக ஈடுபடுத்தப்படுவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை
ஐஜி பவானீஸ்வரி தலைமையில் இயங்கும் அதிரடிப்படை
இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையானது, காவல்துறை ஐஜி கே.பவானீஸ்வரியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளது. இவருக்குக் கீழ் 1 எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள் மற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய முதன்மைக் குழுவினர் செயல்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் 270 களப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 2,538 பிரத்யேக பெண் போலீஸ் பணியாளர்கள் இந்த அதிரடிப்படைப் பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதிநவீன கண்காணிப்பு
ட்ரோன் மற்றும் பாடி வார்ன் கேமராக்கள் மூலம் அதிநவீன கண்காணிப்பு
பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள ஹாட்ஸ்பாட் இடங்களைக் கண்டறிந்து இப்படை தீவிரமாகக் கண்காணிக்கும். இதற்காக இந்தியாவின் முதல் ட்ரோன் ரோந்து வசதி மற்றும் நேரடி ஒளிபரப்பு செய்யும் பாடி வார்ன் கேமராக்கள் போன்ற அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் குற்றவாளிகள் தப்ப முடியாத அளவிற்குப் பாதுகாப்பு அரண் பலப்படுத்தப்பட்டுள்ளது.