LOADING...
லடாக் வன்முறையைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது
லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

லடாக் வன்முறையைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2025
04:37 pm

செய்தி முன்னோட்டம்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட அமைதியான போராட்டம் வன்முறையாக மாறிய சில நாட்களுக்குப் பிறகு, காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார். லே நகரில் நடந்த இந்த வன்முறையில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டியதாக சோனம் வாங்க்சுக் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக, கடந்த புதன்கிழமை நடந்த மோதல்களைத் தொடர்ந்து, லே முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வன்முறையைத் தொடர்ந்து, சோனம் வாங்க்சுக் தனது இரண்டு வார கால உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

லடாக்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரிக்கை

சோனம் வாங்க்சுக் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்றும் கோரி போராடி வந்தார். வன்முறைச் சம்பவங்களுக்கு சோனம் வாங்க்சுக்கின் தூண்டிவிடும் அறிக்கைகளே முதன்மைக் காரணம் என்றும், மத்திய அதிகாரிகளுக்கும் லடாக் பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் திருப்தியடையாத அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுக்களால்தான் போராட்டங்கள் தூண்டப்பட்டன என்றும் அரசாங்கம் அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையே, சோனம் வாங்க்சுக் நிறுவிய தொண்டு நிறுவனமான மாணவர் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்தின் (SECMOL) வெளிநாட்டு நிதி உதவிக்கான FCRA உரிமத்தையும் மத்திய அரசு வியாழக்கிழமை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.