செங்கோட்டை குண்டு வெடிப்பு: ஜெய்ஷ் தீவிரவாத குழுவின் "ஆபரேஷன் டி-6" சதித்திட்டம் அம்பலம்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் இணைந்த ஒரு குழு, வரும் டிசம்பர் 6 அன்று பெரிய அளவிலான ஃபிதாயீன் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு அவர்கள் ரகசியமாக "ஆபரேஷன் டி-6" என்று பெயரிட்டுள்ளனர். இந்தியா டுடே செய்தியின் படி, இந்தத் தீவிரவாதக் குழு, கார் வெடிகுண்டு சாதனத்தைப் பயன்படுத்தி (Vehicle-Borne Explosive Device) பெரிய அளவிலான தற்கொலை தாக்குதலை நடத்த வாரங்களாகத் தயாராகி வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள், கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட டைரிகளில் இருந்து தெரியவந்துள்ளன. தாக்குதல் தொடர்பாக ஃபரிதாபாத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விவரங்கள்
சதி திட்டத்தின் விவரங்கள்
டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு ஆண்டு நிறைவையொட்டி உமர் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பைத் திட்டமிட்டிருந்தார் எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இந்த சதித்திட்டத்தில் தற்கொலைப் போராளியான டாக்டர் உமர் மற்றும் பெண் மருத்துவர் ஷாஹீன் ஷஹீத் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். டிசம்பர் 6 தாக்குதலுக்காக ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கணிசமான வெடிபொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உமர், பல இளம் ஆண்களை தற்கொலை தாக்குதலுக்கு தயார்படுத்தி, அவர்களுக்கு தீவிரவாத மூளைச்சலவை செய்து வந்துள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த நவம்பர் 10 அன்று, தற்கொலைப் போராளியான உமர், வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிக்கொண்டு சுமார் 10 மணி நேரம் டெல்லியின் விவிஐபி (VVIP) பகுதிகள் உட்படப் பல பகுதிகளில் சுற்றி வந்துள்ளார்.