16 வயதில் சொந்த AI நிறுவனம் நடத்தி அசத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர் ராவுல் ஜான்
செய்தி முன்னோட்டம்
9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் 'MeBot' என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு. தற்போது 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டே 15-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு தனது நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் இவர், 15-க்கும் மேற்பட்ட AI செயலிகளை உருவாக்கியுள்ளார்.
தந்தையே ஊழியர்
தந்தையையே ஊழியராக நியமித்த மாணவன்
ராவுலின் பயணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் தனது தந்தை அஜு ஜோசப்பை தனது நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளதுதான்.
அமேசான், அடோபி, விப்ரோ மற்றும் ஐபிஎம் ஆகிய முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களில் பத்தாண்டு காலத்திற்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்ட தனது தந்தையிடமிருந்து, நிறுவனங்களை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது போன்ற நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்காகவே அவரை தனது நிறுவனத்தில் இணைத்துள்ளதாக ராவுல் கூறுகிறார்.
அங்கீகாரம்
உலகளாவிய அங்கீகாரம்
தனது 'திங்க் கிராஃப்ட் அகாடமி' மூலம் ஐஐடி, ஐஐஎம் மற்றும் சர்வதேசப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா AI இம்பேக்ட் சம்மிட் 2026' நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த அமர்வில் தொடக்க உரையாற்றிய ராகுல், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் மற்றும் ஐநா சிறப்புத் தூதர் அமந்தீப் சிங் கில் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இவர், "எதிர் காலத்தில் வெறும் மதிப்பெண்கள் மற்றும் பட்டங்கள் மட்டுமே ஒருவரின் திறமையை முடிவு செய்யாது; படைப்பாற்றலும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்கும் ஆர்வமும் தான் இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" என நம்புகிறார்.