
ராமர் பாலத்தில் நடந்து சென்று தரிசிக்கலாம்: இலங்கை சுற்றுலா கப்பல் சேவையில் புதிய ஆன்மிக பேக்கேஜ்
செய்தி முன்னோட்டம்
ராமர் பாலத்தில் 1 கி.மீ தூரம் நடந்து சென்று தரிசிக்கக்கூடிய வகையில், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது, நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இயங்கும் 'சுபம்' என்ற தனியார் கப்பல் நிறுவனத்தின் புதிய முயற்சியாகும்.
இந்நிகழ்ச்சி குறித்து, நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறுகையில், "பிப்ரவரி 22 முதல், நாகை - காங்கேசன் துறைமுகம் வரை வாரத்தில் ஆறு நாட்கள் (செவ்வாய்கிழமையை தவிர்த்து) பயணியர் கப்பல் சேவை நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டத்தில் அதிக பயணிகள் வருவதால், 22 கிலோ வரை இலவச லக்கேஜ் அனுமதிக்கப்படுகிறது. மேலும், பயணிகளை ஊக்குவிக்க கட்டணமும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது." என்றார்.
விவரங்கள்
கட்டண விவரங்கள்
ஆரம்பத்தில் ₹9,200-ஆக இருந்த இருவழிக் கட்டணம், பிப்ரவரியில் ₹8,500 ஆகவும், தற்போது ₹8,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்றுலா பேக்கேஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:
₹15,000 பேக்கேஜ்: இருவழி பயண கட்டணம், தங்கும் வசதி, வாகனம் மற்றும் 3 இரவுகள் தங்கும் ஏற்பாடுகள்.
₹30,000 பேக்கேஜ்: இலங்கையில் 5 இரவுகள் / 6 நாட்கள் தங்கும் வசதியுடன், உணவு, வாகனம், சுற்றுலா ஆகியவை இணைந்த முழுமையான ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா.
இந்த சுற்றுலாவில், ராமர் பாலத்தில் 1 மணி நேரம் நடந்து செல்லும் வாய்ப்பு, சீதாவனம், அசோக வாடிகா, ராவணன் குகைகள், பழமையான கோவில்கள், மற்றும் ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்கள் பார்வையிடும் வாய்ப்பும் உள்ளது.