'அரசு விடுமுறை அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது' - தூத்துக்குடி ஆட்சியர்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 17 மற்றும் 18ம்.,தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது, நீர்நிலைகளும் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் படுசேதமடைந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் இன்னமும் வடியாத காரணத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி முதல் இன்று(டிச.,22)வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாவட்ட ஆட்சியர்.லட்சுமிபதி, 'அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது'என்று அறிவித்துள்ளார். மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.