Page Loader
மோடியின் கோவை ரோடு ஷோவிற்கு கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்ட மாணவர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

மோடியின் கோவை ரோடு ஷோவிற்கு கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்ட மாணவர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2024
01:28 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி, ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சாலைகளில் அரசு பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கோவை சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் பகுதி வரை பிரதமர் சாலை மார்கமாக ரோடு ஷோ பேரணியில் பங்கேற்றார். பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு பூக்கள் தூவி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

கோவை ரோடு ஷோ

தேர்தல் விதிகளை மீறியதாக புகார்

இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், குறிப்பிட்ட பள்ளி சீருடைகளுடன் நிற்கவைக்கப்பட்டிருந்தனர். அதனை சிலர் புகைபடமெடுத்து, கோவை ஆட்சியரிடத்தில் புகாராக தெரிவித்தனர். நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது போன்ற பிரச்சாரக் கூட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது தேர்தல் விதி. விதிகள் சரியாக கடைபிடிக்கப்படவேண்டும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ள நிலையில், பிரதமரின் பேரணியில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தேர்தல் விதிகளை மீறியதாக புகார்