Loading...
பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையை மீண்டும் தொடங்கியவர்கள்! பிரிவினை கொடுமைகள் நினைவு நாளில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
பிரிவினை கொடுமைகள் நினைவு நாளில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையை மீண்டும் தொடங்கியவர்கள்! பிரிவினை கொடுமைகள் நினைவு நாளில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2026
10:35 am

செய்தி முன்னோட்டம்

இந்திய வரலாற்றின் மிக சோகமான அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியப் பிரிவினையின் போது பாதிக்கப்பட்ட மக்களின் துணிச்சலையும் மன உறுதியையும் நினைவுகூரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 14 அன்று பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தை முன்னிட்டுத் தனது மரியாதையை செலுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் வரலாற்றில் எண்ணற்ற குடும்பங்கள் தங்கள் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்த அந்தப் வேதனையான காலத்தை இந்நாள் நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை

பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைக் கட்டியெழுப்பிய மக்கள்

பிரதமர் மோடி தனது உரையில், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு துயரங்களை சந்தித்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்கள் பூஜ்ஜியத்தில் இருந்து தங்களது வாழ்க்கையை மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்பி, நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றார்.

அவர்களின் வாழ்க்கைப் பயணம் மனித மனத்தின் அசாத்திய வீரியத்தையும் நம்பிக்கையையும் நமக்கு உணர்த்துகிறது என்றும், நாட்டில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பேணிப் பாதுகாத்து வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

வெளியுறவுத்துறை

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்து

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் பிரிவினையின் போது ஏற்பட்ட அளப்பரிய மனிதத் துயரங்கள் மற்றும் அதன் புவிசார் அரசியல் தாக்கங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

தனது எக்ஸ் தளப் பதிவில், பிரிவினையின் வேதனைகளைத் தாங்கி மீண்டும் எழுந்து நின்ற மக்களின் தைரியத்திற்குத் தலைவணங்குவதாகவும், அதேவேளையில் நம் வரலாற்றின் இந்த கசப்பான பாடங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இடப்பெயர்வு

வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வு

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற போதிலும், பிரிவினையின் வடு ஆறாத ஒன்றாக மாறியது.

பிரிட்டிஷ் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது பூர்வீக நிலங்களை விட்டுப் பிரிந்து செல்லும் சூழல் ஏற்பட்டது.

மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய இந்த இடப்பெயர்வின் போது நிகழ்ந்த வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகளை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ADVERTISEMENT