ரபேல் ஜெட், பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களை மையப்படுத்தி பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக, இன்று காலை, பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டுள்ளார். அந்நாட்டு அதிபர் மெக்ரோனை நேரில் சந்தித்து, அவருடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "அதிபர் மெக்ரோனுடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். நீண்டகால மற்றும் நம்பத்தக்க நட்புறவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்து செல்வதற்கான விரிவான விவாதங்களை நடத்த உள்ளேன். 2022-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டுக்கு கடைசியாக அரசு முறை பயணம் மேற்கொண்டதில் இருந்து பல முறை அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. சமீபத்தில் நடப்பு மே மாதத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது அவரை சந்தித்தேன்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பயணம் குறித்து மோடி பதிவு
இந்தியா- பிரான்ஸ் நல்லுறவு குறித்த ஆலோசனை
இந்த 2 நாள் பயணத்தில், இந்தியா-பிரான்ஸ் நாட்டின் வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என செய்திகள் கூறுகின்றன. மேலும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பிரான்ஸ் தேசிய தினத்தின் அணிவகுப்பிற்கு, பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவில், இந்திய முப்படைகள் அணிவகுப்பும் இடம்பெறுகிறது. இந்த ஆண்டு, இந்தியா-பிரான்ஸ் ராணுவ உறவின் 25-வது ஆண்டு ஆகும். இரு நாட்டு உறவிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, அதிபர் மெக்ரோன், அரசாங்க விருந்து அளிக்கிறார். அதன்பிறகு, ஜூலை 15ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு செல்கிறார், பிரதமர் மோடி. ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயத் அல் நயானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.