ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை; மசூத் பெசெஷ்கியனுடன் பேசியது என்ன?
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது பிராந்திய அமைதி மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவது குறித்துத் தனது கவலையைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார். கூடுதல் விவரங்கள் இங்கே:-
கண்டனம்
தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம்
பாரசீகப் புத்தாண்டான நவ்ரூஸ் மற்றும் ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு ஈரான் அதிபருக்குப் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த வசந்த காலம் மேற்கு ஆசியாவில் அமைதியையும், செழிப்பையும் கொண்டு வர வேண்டும் எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிராந்தியத்தில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச அளவில் எரிபொருள் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பாதிப்பதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, உலக நாடுகளின் விநியோக வழித்தடங்கள் தடையின்றி இயங்க வேண்டும் என்பதையும், கடல்சார் சுதந்திரத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பஹ்ரைன்
பஹ்ரைன் மன்னருடன் பேச்சுவார்த்தை
ஈரான் அதிபரைத் தொடர்ந்து, பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபாவுடனும் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை உரையாடினார். மின்சாரம் மற்றும் சிவில் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைப் பிரதமர் கண்டனம் செய்தார். பஹ்ரைனில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரின் நலனில் அக்கறை காட்டும் மன்னருக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, பிரதமர் மோடி சவுதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார். போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.