NEET பேப்பர் லீக் எதிர்த்து போராட்டம் செய்யும் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்
செய்தி முன்னோட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்தி வரும் போராட்டம், இன்று செவ்வாய்க்கிழமை 11-வது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில், ஜந்தர் மந்தர் பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, தங்களின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியக் குழு உறுப்பினர்கள் உள்ளே நுழைவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டு வருவதாக சிஜேபி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அங்கு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தற்பொழுது மிகவும் நலிவடைந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Heavy police deployment at Jantar Mantar.
— Abhijeet Dipke (@abhijeet_dipke) June 30, 2026
The police are not allowing people to enter, and many of our core team members are being denied entry.
What are they planning to do?
எச்சரிக்கை
சோனம் வாங்சுக் உடல்நிலை சரிவு: சிஜேபி எச்சரிக்கை
தொடர்ந்து 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் இரத்த சர்க்கரை அளவு 66 ஆகக் குறைந்துள்ளதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா, சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். முன்னதாக நேற்று பேசியிருந்த சோனம் வாங்சுக், "தங்களின் இந்தப் போராட்டம் தேசத்திற்கு எதிரானது அல்ல; அதிகாரிகள் இதனைப் பலப்பிரயோகத்தால் ஒடுக்க நினைக்காமல், மிகுந்த உணர்திறனுடன் அணுக வேண்டும், இல்லையெனில் பொதுமக்கள் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்"* என்று குறிப்பிட்டிருந்தார்.
சாடல்
"டபுள் என்ஜின் - டபுள் லீக்": அபிஜீத் திப்கே சாடல்
தேர்வு முறைகேடுகள் குறித்துப் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, சமீபத்தில் நடந்துள்ள ராஜஸ்தான் பாரா மெடிக்கல் கவுன்சில் (RPMC) தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து மத்திய, மாநில பாஜாக அரசுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். "பாஜக அரசால் நாட்டில் எந்தவொரு தேர்வையும் ஒழுங்காக நடத்த முடிவதில்லை. இது டபுள் என்ஜின் அரசு அல்ல; டபுள் லீக் அரசு!" என்று விமர்சித்துள்ளார். மேலும், தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கல்வி முறையில் போதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.