சென்னை ஏர்போர்ட் அருகே இருந்த பிரபல தனியார் ஹோட்டலை சீல் வைத்த அதிகாரிகள்
செய்தி முன்னோட்டம்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று மீட்கப்பட்டது. குத்தகை காலம் முடிந்த பிறகும் வணிக ரீதியாகச் செயல்பட்டு வந்த கட்டடம் ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது. இது நீண்டகாலமாக சரவண பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும், அந்த இடத்தில் வணிக ரீதியான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்
நீதிமன்ற உத்தரவு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று காலை அதிகாரிகள் குழு ஆலந்தூரில் உள்ள அந்த கட்டடத்திற்கு விரைந்தது. இந்தக் கட்டடத்தினை சீல் வைக்க போவதாக அறிவித்து, ஹோட்டல் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதிகாரிகள் சரவணபவன் ஹோட்டலின் பெயர் பலகையை அகற்றியதுடன், கட்டடத்திற்கு நிரந்தரமாகச் சீல் வைத்தனர். இதன் மூலம், குத்தகைக் காலம் முடிந்த சுமார் 15 கிரவுண்டு மதிப்புள்ள அரசு நிலம் முறையாக மீட்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.