LOADING...
அதிமுகவிற்கு அடுத்த பின்னடைவு: கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்
கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

அதிமுகவிற்கு அடுத்த பின்னடைவு: கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2026
02:09 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுக கட்சிக்கு தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கரூரின் சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், திங்கட்கிழமை (ஜூன் 29) தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியிலிருந்தும் விலகியுள்ளார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதிமுகவிலிருந்து வெளியேறும் 6 ஆவது சட்டமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் விலகல்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் சவால்களை உருவாக்கியுள்ளன.

ராஜினாமா ஏற்பு

முறைப்படி ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிய பெருமை கொண்டவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கடந்த 2021 தேர்தலில் தோல்வியடைந்த இவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் 1,821 வாக்குகள் என்ற சிறிய வித்தியாசத்தில் கரூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றிருந்தார். இவரது ராஜினாமா கடிதத்தை நேரில் பெற்று முறைப்படி ஏற்றுக் கொண்டதாகத் தமிழகச் சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Embed

Advertisement

6 எம்எல்ஏக்கள்

தேர்தலில் வென்ற பின் அதிமுகவிலிருந்து விலகிய 6 எம்எல்ஏக்கள்

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் நிலவி வந்த சூழலில், அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் துறந்து வருகின்றனர். இதற்கு முன்பாக இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), பி.சத்யாபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகிய 5 பேர் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். தற்பொழுது 6 ஆவது நபராக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

Advertisement

தவெக

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் தலைவர்கள்

ஏற்கனவே ராஜினாமா செய்திருந்த 4 அதிமுக எம்எல்ஏக்கள் தற்பொழுது ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அண்மையில் விலகிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தற்பொழுது விலகியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவருமே முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கட்சியில் இணைவார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவர்கள் பாஜகவில் இருந்து விலகி தனி இயக்கத்தை கட்டமைத்து வரும் அண்ணாமலையுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளார்களா என்ற விவாதமும் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.

Advertisement