இனி இந்தியாவும் ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும்; ரூ.1 லட்சம் கோடி நிதியை அறிவித்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
தனியார் துறையின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தை (Research, Development and Innovation Fund) அறிமுகப்படுத்தினார். 'வளர்ச்சி அடைந்த பாரதம் 2047' இலக்கை நோக்கிச் செல்வதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் உலகத் தலைவர்களை ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் முதல் எமர்ஜிங் சயின்ஸ் டெக்னாலஜி அன்ட் இன்னோவேஷன் மாநாட்டில் (Emerging Science Technology and Innovation Conclave) பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையே (Department of Science and Technology) இந்த RDI நிதியத்தின் மைய அமைச்சகமாகச் செயல்படும்.
ஆராய்ச்சி
தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்படும் ஒரு சிறப்பு நோக்க நிதியத்தில் (Special Purpose Fund) இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த நிதியம் நேரடியாகத் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யாமல், இரண்டாம் நிலை நிதி மேலாளர்கள் மூலம் மூலதனத்தை முதலீடு செய்யும். இந்த நிதி மேலாளர்கள், நிபுணர்களைக் கொண்ட முதலீட்டுக் குழுக்களின் பரிந்துரையின்படிச் செயல்படுவார்கள். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா புத்தாக்கம் சார்ந்த நாடாக உருவெடுத்துள்ளது என்றார். இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதுடன், காப்புரிமைகள் பதிவு சுமார் 17 மடங்கு அதிகரித்துள்ளது.
முன்னோடி
தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தில் முன்னோடி
பிரதமர் மோடி மேலும், "இந்தியா இப்போதுத் தொழில்நுட்ப நுகர்வோர் அல்ல, மாறாகத் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தில் முன்னோடி" என்று கூறினார். கூடுதலாக, சுத்தமான எரிசக்தி மற்றும் செமிகண்டக்டர் போன்றப் புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் 6,000க்கும் மேற்பட்ட டீப் டெக் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுடன் (Deeptech Startups), உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.