LOADING...
மியான்மர் சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி கிரிப்டோகரன்சி மோசடி செய்யக் கட்டாயப்படுத்தப்படும் 25 மகாராஷ்டிர இளைஞர்கள்; பகீர் தகவல்
மியான்மர் சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கிய 25 மகாராஷ்டிர இளைஞர்கள்

மியான்மர் சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி கிரிப்டோகரன்சி மோசடி செய்யக் கட்டாயப்படுத்தப்படும் 25 மகாராஷ்டிர இளைஞர்கள்; பகீர் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 04, 2026
09:43 am

செய்தி முன்னோட்டம்

அதிக சம்பளத்துடன் கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 25 இளைஞர்கள், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள கொடூரமான சைபர் மோசடி முகாம்களில் தற்பொழுது சிக்கித் தவித்து வருகின்றனர். இதில் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த 8 இளைஞர்களும், பீடு மற்றும் தாராஷிவ் மாவட்டங்களைச் சேர்ந்த சிலரும் அடங்குவர். இந்த மியான்மர் சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கிய ஒரு இளைஞர் தனது குடும்பத்தினரை ரகசியமாகத் தொடர்புகொண்டு அங்கு நடக்கும் கொடூரங்களை விவரித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளை மீட்கக் கோரி அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊதியம்

மாதம் 70,000 சம்பள ஆசையும் கடத்தலும்

கடந்த ஏப்ரல் 25 முதல் சிறைபிடிக்கப்பட்டுள்ள நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், பாங்காக் நகரில் மாதம் 70,000 ரூபாய் சம்பளத்தில் வேலை என்று நம்பி சென்று கடத்தப்பட்டுள்ளார். தற்போது இவரை விடுவிக்கக் கடத்தல்காரர்கள் 8 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அங்குள்ள முகாம்களில் சிக்கியிருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வரை மிக மோசமான சூழலில் கட்டாய வேலை செய்ய வைக்கப்படுவதோடு, வேலை செய்ய மறுப்பவர்களைத் தனி அறையில் கட்டி வைத்து எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துக் கொடூரமாக சித்திரவதை செய்கிறார்கள்.

மோசடி

கிரிப்டோகரன்சி மோசடி மற்றும் இலக்குகள்

இந்த ரகசிய முகாம்களில் சிக்க வைக்கப்படும் இளைஞர்கள், போலியான பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, ஆன்லைன் மூலம் பழகி மக்களை ஏமாற்றவும், கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடிகளில் மக்களை வீழ்த்தவும் துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை முடிக்கத் தவறுபவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதோடு, ஒரு சிறிய அறையிலேயே 20 க்கும் மேற்பட்ட நபர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கணக்குப்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 25 நபர்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலுமிருந்து 400 க்கும் மேற்பட்டோர் இது போன்ற வெவ்வேறு சைபர் குற்ற முகாம்களில் தற்பொழுது சித்திரவதையை அனுபவித்து வருகிறார்கள்.

Advertisement

மீட்க முயற்சி

மீட்பு நடவடிக்கையில் இறங்கிய மகாராஷ்டிர அரசு

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கார்ப்பரேட்டர் பிரசாந்த் திவேயின் உதவியுடன் மகாராஷ்டிர பேரிடர் மேலாண்மை அமைச்சர் கிரீஷ் மகாஜனை அணுகியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிணைக் கைதிகளாக உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, இதே போன்ற ஒரு கூட்டு ஆபரேஷன் மூலம் கடந்த ஜனவரி 2026 இல் மியான்மர் சைபர் முகாம்களில் சிக்கியிருந்த ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement