LOADING...
'ஆச்சாரங்களை மாற்ற வேண்டாம்!' சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கிய பினராயி விஜயன் அரசு! தேர்தலை ஒட்டி அதிரடி முடிவு
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு திடீர் யூ-டர்ன்

'ஆச்சாரங்களை மாற்ற வேண்டாம்!' சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கிய பினராயி விஜயன் அரசு! தேர்தலை ஒட்டி அதிரடி முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
02:25 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அதிரடியாகப் பின்வாங்கியுள்ளது. 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்ற நீண்டகால மத ரீதியான பழக்கவழக்கங்கள் மற்றும் ஆச்சாரங்களை நிலைநாட்டப்போவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

அமைச்சரவை

அமைச்சரவையின் சிறப்பு முடிவு

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று (மார்ச் 13) நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. சபரிமலையின் பழங்கால ஆச்சாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தீர்மானத்தை அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மார்ச் 14 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, சபரிமலை தொடர்பான மறுஆய்வு மனுக்களை விசாரிக்க உள்ள நிலையில் அரசின் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

பாஜக

பாஜகவின் கோரிக்கையும் விமர்சனமும்

அரசின் இந்த முடிவைத் தேர்தல் லாபத்திற்கான யூ-டர்ன் என்று பாஜக விமர்சித்துள்ளது. பாஜக மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறுகையில், "அரசின் இந்த நிலைப்பாடு அவர்கள் தேர்தலை மனதில் வைத்தே செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. சபரிமலை ஆச்சாரங்களைக் காக்கப் போராடிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

விளக்கம்

சிபிஐ(எம்) கட்சியின் விளக்கம்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், இது சித்தாந்த ரீதியான பின்வாங்கல் அல்ல என்று விளக்கமளித்துள்ளார். சட்ட நிபுணர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களுடன் ஆலோசித்த பிறகு, பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொருத்தமான பதில் அளிக்க அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், 2018 இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முயன்ற அரசு, தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த மென்மையான போக்கை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Advertisement