LOADING...
தமிழக அரசுக்கு நெருக்கடி: ஜனவரி 6 முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்
ஜனவரி 6-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது ஜாக்டோ-ஜியோ

தமிழக அரசுக்கு நெருக்கடி: ஜனவரி 6 முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 23, 2025
02:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO), வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. அரசுடன் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள், போராட்டத்தை தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளனர்.

கோரிக்கைகள்

முக்கியக் கோரிக்கைகள் என்ன?

ஜாக்டோ-ஜியோ அமைப்பு முன்வைத்துள்ள 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில் முதன்மையானவை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தேர்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும். பள்ளிகள் மற்றும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைந்து நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (Surrender Leave) மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

பாதிப்பு

முடங்கும் அபாயத்தில் அரசுப் பணிகள்

ஜனவரி 6 முதல் தொடங்கவுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். இதனால்: 1. அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்படலாம். 2. வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களின் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 3. பொதுமக்களுக்கான அத்தியாவசிய அரசு சேவைகள் பெறுவதில் சிக்கல் நேரலாம். ஜனவரி 6-க்குள் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணுமா அல்லது போராட்டம் வலுப்பெறுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement