
சமையல் எரிவாயு டேங்கர் லாரி வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு
செய்தி முன்னோட்டம்
சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. புதிய ஒப்பந்த விதிகளால் 700 க்கும் மேற்பட்ட லாரிகளுக்குப் பணி வழங்கப்படாததைக் கண்டித்து, தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வியாழக்கிழமை (அக்டோபர் 9) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், மொத்தம் 5,500க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சமையல் எரிவாயு என்பது அத்தியாவசியப் பொருள் என்பதால், அதன் விநியோகத்தைத் தடுப்பது சட்டவிரோதமானது என்று ஐஓசிஎல் சுட்டிக்காட்டியுள்ளது.
தட்டுப்பாடு
சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
மேலும், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்குச் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதுடன், எண்ணெய் நிறுவனங்களுக்குக் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தத்திற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் இன்றிச் சமையல் எரிவாயு கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.