 
                                                                                ஒரு அம்பு இரண்டு இலக்குகள்; சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் வத்சாயன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தார். இப்பகுதியில் சீனாவின் ராணுவச் செயல்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராகவும், நிலைநிறுத்தப்பட்டும் உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். தற்போது, இந்தியக் கடற்படையின் 40 போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் எண்ணிக்கையை 50க்கும் மேல் உயர்த்தும் பணியில் இருப்பதாகவும் துணை அட்மிரல் வத்சாயன் தெரிவித்தார்.
ஐஎன்எஸ் விக்ராந்த்
சர்வதேசக் கடற்படைக் கூட்டாய்வில் ஐஎன்எஸ் விக்ராந்த்
எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத் தங்கள் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் துணைத் தலைவர் வத்சாயன் வெளிநாட்டுக் கப்பல்களுக்குத் தெளிவாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், இந்தியக் கடற்படை பிப்ரவரி 2026 இல் விசாகப்பட்டினத்தில் சர்வதேசக் கடற்படைக் கூட்டாய்வை (International Fleet Review) ஏற்பாடு செய்யவுள்ளது. இதில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலும் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில், கடற்படையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், இந்திய கடற்படை ஒரு அம்பு இரண்டு இலக்குகள் என பாகிஸ்தான் மற்றும் சீனாவை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள தயாராக இருப்பதையும் மறைமுகமாக உணர்த்தியுள்ளது.