LOADING...
இந்தியாவில் 78 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக தகவல்
இந்தியாவில் 78 நாட்களுக்கு கச்சா எண்ணெய் இருப்பு

இந்தியாவில் 78 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
May 25, 2026
08:02 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் அடுத்த 78 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு பாதுகாப்பாக உள்ளதாக நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று வெடித்த மேற்கு ஆசியப் போரினால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கி, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிபொருள் விநியோகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த விநியோகத் தடையால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பணவீக்க அச்சம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்தியப் பெட்ரோல் பங்குகளில் தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்கப் போதிய இருப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எரிபொருள் விலை உயர்வு

நாடு முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விபரங்கள்

சர்வதேசச் சந்தையில் நிலவும் சூழல் காரணமாக, இந்தியாவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.61 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.71 ரூபாயும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்குள் நடக்கும் நான்காவது விலை உயர்வு இது என்பதால், மே 15 முதல் கணக்கிடும் போது ஒட்டுமொத்தமாக லிட்டருக்குச் சுமார் 7.5 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. இந்தத் தொடர் விலை உயர்வால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை தற்பொழுது 100 ரூபாயைக் கடந்து விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

நிதியமைச்சர் அதிகாரப்பூர்வ விளக்கம்

எரிபொருள் விலை உயர்வு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்த திடீர் விலை உயர்வு குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது அரசின் கொள்கை முடிவு அல்ல என்றும், சர்வதேச கொள்முதல் நிலவரங்களின்படி எண்ணெய் நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கை என்றும் கூறியுள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், கடந்த 75 நாட்களாக மக்கள் மீது சுமை விழாமல் தடுக்க மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் வரியை ஏற்றுப் பாரத்தைத் தாங்கியதாகக் குறிப்பிட்டார். தற்போதைய இக்கட்டான உலகப் பொருளாதாரச் சூழலில், பொதுமக்கள் அனைவரும் எரிபொருள், உரங்கள் மற்றும் அந்நியச் செலாவணி (3Fs - Fuel, Fertiliser, Forex) ஆகியவற்றைப் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

ஆயில் நிறுவனங்களின் பங்கு

இந்திய எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தும் பொதுத்துறை நிறுவனங்களின் நிலைப்பாடு

இந்தியாவில் தற்பொழுது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே நாட்டின் 90 சதவீத எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தி வருகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்பொழுது சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதனால், வரும் நாட்களில் எண்ணெய் நிறுவனங்களின் இறக்குமதிச் செலவுகள் குறைந்து, உள்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் கட்டுக்குள் வரும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement