LOADING...
மன்னர் பரம்பரை அல்ல, உங்கள் வீட்டுப் பிள்ளை! முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் விஜய் ஆற்றிய உருக்கமான முதல் உரை!
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் விஜய் ஆற்றிய உருக்கமான முதல் உரை

மன்னர் பரம்பரை அல்ல, உங்கள் வீட்டுப் பிள்ளை! முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் விஜய் ஆற்றிய உருக்கமான முதல் உரை!

எழுதியவர் Vasuki
May 10, 2026
11:39 am

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று காலை 10 மணியளவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய ஆட்சி இன்று மலர்ந்துள்ளது. அவருடன் சேர்த்து என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற பின் உரையாற்றிய விஜய், தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பதாகக் கூறி, நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்தார்.

எளிய பின்னணி

வறுமை எனக்குத் தெரியும்

தனது உரையைத் தொடங்கிய விஜய், தான் ஒரு சாதாரண மனிதன் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் வறுமை என்றால் என்ன என எனக்குத் தெரியும். நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. என்னை அன்பாக, ஒரு உறவாக ஏற்றுக்கொண்ட உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்தவே இந்த விஜய் வந்துள்ளான். இந்த நீண்ட பயணத்தில் பல கஷ்டங்கள், அவமானங்களைச் சந்தித்தோம். எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் உங்களுக்கும் ஏற்பட்டது. ஆனாலும் என்னுடன் உறுதியாக நின்றீர்கள். நான் ஒன்றும் தேவதூதன் இல்லை, நானும் உங்களில் ஒரு சாதாரண மனிதன் தான்.

நிதிநிலை குறித்து அதிரடி

வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்

தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை குறித்து அவர் கவலை தெரிவித்தார். 10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. கஜானாவைச் சுத்தமாக வழித்து எடுத்துச் சென்றுள்ள சூழலில் நாம் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளோம். உள்ளே சென்று பார்த்தால் தான் முழு விவரமும் தெரியும். விரைவில் அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். நிர்வாகத்தில் எப்போதுமே வெளிப்படைத்தன்மையுடன் இருப்பேன்.

Advertisement

அதிரடி உத்தரவுகள்

முக்கிய வாக்குறுதிகள்

முதலமைச்சராகத் தனது முன்னுரிமைகள் எவை என்பதை விஜய் பட்டியலிட்டார். போதைப்பொருள் ஒழிப்பு: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கும். இதில் எந்த சமரசமும் கிடையாது. பெண்கள் பாதுகாப்பு: பெண்கள் பாதுகாப்பை மிகச்சிறப்பாக வைத்திருப்பேன். கல்வி, ரேஷன், மருத்துவம் மற்றும் சாலை வசதிகள் தான் எனது அரசாங்கத்தின் நான்கு தூண்கள். தவறுக்கு இடமில்லை: இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்யவும் விடமாட்டான். யாருக்காவது அப்படி எண்ணம் இருந்தால் இப்போதே அதை அழித்துவிடுங்கள். அதிகாரம் என்பது ஒரு 'பவர் சென்டர்' தான், அது நான் தான்.

Advertisement

புதிய யுகம் தொடக்கம்

குட்டி நண்பர்களுக்கு நன்றி

அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஆட்சியை வழங்குவதாக அவர் உறுதியளித்தார் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினருக்குமான முகம் நான். என்னை அவமானப்படுத்தியவர்களாக இருந்தாலும், 8 கோடி மக்களும் என் மக்கள் தான். எல்லாரும் சேர்ந்து ஒரு புதிய அரசை, புதிய யுகத்தைக் கொடுப்போம். தனது உரையின் இறுதியில், மாமாவின் குட்டி நண்பா, நண்பீஸ்க்கு நன்றி. அவர்களால்தான் இது நடந்துள்ளது. அவர்களின் எதிர்காலத்திற்குப் பல நன்மைகளைச் செய்வேன் என உருக்கமாக முடித்தார்.

Advertisement