50% விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாக உள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு தனது சமீபத்திய அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் தணிக்கை செய்யப்பட்ட வணிக ரீதியான விமானங்களில் சுமார் 50 சதவீதம் தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகளை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 2025 முதல் பிப்ரவரி 2026 வரை மொத்தம் 754 விமானங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 377 விமானங்களில் மீண்டும் மீண்டும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் எழுந்தது தெரியவந்துள்ளது. இண்டிகோ:தணிக்கை செய்யப்பட்ட 405 விமானங்களில் 148 விமானங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. ஏர் இந்தியா:ஆய்வு செய்யப்பட்ட 166 விமானங்களில் 137 விமானங்கள்(சுமார் 82%) தொடர்ச்சியான கோளாறுகளைக் கொண்டுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்:101 விமானங்களில் 54 விமானங்களில் தொழில்நுட்பப் பிரச்சனைகள் நீடிக்கின்றன.
விதிமீறல்கள்
விதிமீறல்கள் மற்றும் அபராதம்
கடந்த 2025-ஆம் ஆண்டு அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், ஏர் இந்தியா நிறுவனத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. விமானிகளின் பணி நேர வரம்பு (FDTL) மீறல், அவசரகால உபகரணங்களின் காலாவதி மற்றும் தகுதியற்ற முறையில் விமானங்களை இயக்கியது போன்ற புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தகுதியான சான்றிதழ் இன்றி 8 முறை விமானத்தை இயக்கியதற்காக ஏர் இந்தியாவுக்கு பிப்ரவரி 2026-ல் ₹1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிஜிசிஏ
டிஜிசிஏ (DGCA) மீதான விமர்சனம்
விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ-வில் 48.3 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்றக் குழு, இவ்வளவு பெரிய பணியாளர் பற்றாக்குறையுடன் எவ்வாறு பாதுகாப்பு கண்காணிப்பை உறுதி செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி சீர்திருத்தங்கள், கடுமையான தண்டனைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.