பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு
உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மியான்மரை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியா மற்றும் மியான்மர் இடையே இருந்த எல்லை பகுதியை மூடவிருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் இருந்த நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அமித்ஷா. "இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மியான்மர் எல்லையில் உள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான சுதந்திர இயக்க முறைமையை (FMR) ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் (MHA) முடிவு செய்துள்ளது" என்று அமித்ஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாயன்று, அமித்ஷா, மியான்மர் எல்லையின் 1,643-கிலோமீட்டர் நீளத்திற்கு வேலி அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.
மணிப்பூர் மற்றும் மிசோரமின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கை
முன்னர் இந்த FMR மூலம், எல்லையில் வசிப்பவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல், இரு நாட்டிற்குள்ளேயும் 16 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரியும், கிளர்ச்சியாளர்கள் வன்முறை போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். ரக்கைன் மாநிலம் மற்றும் பல பிராந்தியங்களில் கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய இனக்குழுக்களுக்கும், மியான்மர் ராணுவத்திற்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரு தரப்புக்கும் இடையேயான போராட்டம், நவம்பர் முதல் பல முக்கிய மியான்மர் நகரங்கள் மற்றும் இந்தியாவின் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது மணிப்பூர் மற்றும் மிசோரமின் பாதுகாப்பிற்கான கவலைகளை அதிகரிக்கவே, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.