2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அரசு எரிபொருள் விலையை குறைக்கும் என கூறுவது தவறான கருத்து எனத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம், தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணம் அளிக்க எரிபொருள் விலை குறையுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, இது ஊடகங்களால் பரப்பப்பட்ட கூற்று என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் கூறினார். சர்வதேச விலைகள், போக்குவரத்து செலவுகள், சுத்திகரிப்பு செலவுகள் மற்றும் வரிகள் போன்ற பல காரணிகளால் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு பிறகு எரிபொருள் விலை குறைக்கப்பட்டதாக அமைச்சர் கருத்து
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு 2022 இல் சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரித்ததைக் குறிப்பிட்ட ஹர்தீப் சிங் பூரி, எண்ணெய் வழங்கும் நாடுகளை அவற்றின் விலைகளைக் குறைக்குமாறு இந்தியா கேட்கவில்லை என்று கூறினார். எனினும், அதற்கு மாறாக, விலையைக் குறைக்க பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் மீதான கலால் வரியை தங்கள் அரசு குறைத்ததாகக் கூறினார். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருளின் விலையை மேலும் ரூ.8 முதல் ரூ.11 வரை குறைக்கும் வகையில் எரிபொருளின் மீதான மதிப்புக்கூட்டு வரியை அரசு குறைத்துள்ளது என்றார். மேலும், இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது குறித்து பேசிய பூரி, இந்தியாவின் அனுபவம் வளரும் நாடுகளுக்கு மிகவும் ஏற்றது என்று கூறினார்.